25-ந்தேதி முதல் சேவை தொடங்குகிறது: மதுரையில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 3 விமானங்கள் இயக்கம் முன் பதிவு தீவிரம்


25-ந்தேதி முதல் சேவை தொடங்குகிறது:  மதுரையில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 3 விமானங்கள் இயக்கம்   முன் பதிவு தீவிரம்
x
தினத்தந்தி 23 May 2020 4:13 AM GMT (Updated: 23 May 2020 4:13 AM GMT)

மதுரையில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு 25-ந்தேதி முதல் விமானங்கள் இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 25 பயணிகள் விமானம் மற்றும் 4 சரக்கு விமானங்கள் சேவை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 49 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த 12-ந் தேதி மதுரையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சரக்கு விமான சேவை தொடங்கி நடைபெற்று வந்தது.

உள்நாட்டு விமான சேவை

இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மதுரையில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைப்பது, பயணிகளை பாதுகாப்பாக விமான நிலையங்களுக்கு அழைத்து வருவது, பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்வது உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு கட்டங்களாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம்

இதுகுறித்து தனியார் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து மதுரையிலிருந்து முதற்கட்டமாக சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. 25-ந்தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு காலை 9 மணி மற்றும் காலை 11.30 மணிக்கு என 2 விமானங்களும், மதியம் 1 மணிக்கு பெங்களூருவுக்கு ஒரு விமானமும் இயக்கப்பட இருக்கிறது. 1-ந் தேதி வரை ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்படும். அதன்பிறகு படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். விமானங்கள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் விமான கட்டணங்களும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. கொரோனா அதிகரித்து வரும் நிலையிலும் 25-ந்தேதி முதல் விமானங்களில் பயணிக்க ஏராளமானவர்கள் அதிக ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு 31-ந்தேதி வரை விமானங்கள் இயக்க வேண்டாம் என அறிவுறுத்தினால் அந்த அறிவுரையை கேட்பதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். அதன்படி விமானங்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் பயணிகளுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story