பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 11:45 PM GMT (Updated: 23 May 2020 10:32 PM GMT)

கர்நாடகத்தில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்குகடைப் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கர்நாடகத்தில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு ரெயில், அரசு பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி வரை கர்நாடகத்தில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதே நேரத்தில் மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு இருந்தாலும் 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர வணிக நிறுவனங்கள் உள்பட பிற கடைகள் திறக்க அனுமதி கிடையாது.

அதாவது பால், காய்கறி, பழங்கள், மருந்துகடைகள், மருத்துவமனைகள் திறந்திருக்கும். ஆம்புலன்ஸ் சேவை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ், ரெயில், ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இன்று ஓடாது. மதுக்கடைகள் திறக்க அனுமதி கிடையாது. மாநிலம் முழுவதும் நேற்று இரவு 7 மணி முதலே மதுக்கடைகள் மூடப்பட்டன. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு எந்த விதமான சிரமமின்றி கிடைக்கும் என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

மேலும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கப்படும். கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பெங்களூரு அருகே உள்ள ராமநகர், துமகூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்றே மக்கள் பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

பெங்களூருவில் நேற்று இரவு 7 மணியில் இருந்தே ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது தவிர தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பெங்களூரு நகரில் முக்கியமான சாலைகள் நேற்று இரவே மூடப்பட்டன. வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றுவதை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும், நாளை ரம்ஜான் பண்டிகை என்பதாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மார்க்கெட்டுகளில் நேற்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று கடைகள் திறக்கப்படாது என்று கருதி மாநிலம் முழுவதும் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுகள், பிற மார்க்கெட்டுகளுக்கு நேற்று காலையிலேயே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் முண்டியடித்து வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

பெங்களூருவில் சிவாஜி நகர், மல்லேசுவரம், ஜெயநகர், ஜே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்திருந்தனர். சிட்டி மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. கொரோனா வைரஸ் பீதியிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், தேவையில்லாமல் வெளியே நடமாட கூடாது என்று மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்று நடைபெறும் ஊரடங்குக்கு முன்னாள் மந்திரி யு.டி.காதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வாரத்தில் 6 நாட்கள் மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை வீட்டுக்குள் இருக்கும்படி கூறுவதால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார். இதுபோல, பெங்களூருவில் முழு ஊரடங்குக்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இன்று நகரில் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

Next Story