சூறைக்காற்றில் சரிந்த வாழைகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


சூறைக்காற்றில் சரிந்த வாழைகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 May 2020 11:00 PM GMT (Updated: 24 May 2020 6:43 PM GMT)

தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன் சூறைக்காற்றில் சரிந்த வாழைகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், கோரம்பள்ளம், கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்றில் ஏராளமான வாழைகள் சரிந்து சேதம் அடைந்தது. குழை தள்ளிய நிலையில் இருந்த வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் அத்திமரப்பட்டி, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வாழைகளை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், சூறைக்காற்றில் வாழைகள் சரிந்து நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பகுதியின் கடைசி குளமான கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளேன். எனவே விவசாயிகளின் நலன்கருதி ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன கடைசி குளம் வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், உதவி தோட்டக்கலை இயக்குனர் ஜெபத்துரை, உதவி அலுவலர்கள் அரிகரன், வேடியப்பன், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயக்கொடி, ஒன்றிய துணை செயலாளர் ஜெயராஜ், பால்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைகுட்டம், சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம், கோபாலபுரம், சிலோன் காலனி, இந்திரா நகர், வடக்கு ஆவரங்காடு, அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா கலந்து கொண்டு 475 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், கனகரத்தினம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story