மாமல்லபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு


மாமல்லபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 24 May 2020 11:30 PM GMT (Updated: 24 May 2020 8:12 PM GMT)

மாமல்லபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

மாமல்லபுரம், 

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மூடப்பட்டன.

ஊரக பகுதிகளில் கடந்த 19-ந்தேதி சலூன் கடைகள் திறக்க தமிழக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நகர, பேரூராட்சி பகுதிகளில் திறக்க அனுமதி வழங்கவில்லை.இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் மூடப்பட்ட சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.

நேற்று காலை 7 மணி அளவில் சலூன் கடைகள் திறக்கப்பட்டதும் பல வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வந்து முடிகளை வெட்டி மகிழ்ந்தனர். முடி திருத்தும் ஊழியர்கள் பலர் அந்தந்த கடைகளில் முக கவசம் அணிந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டினர். சலூன் கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.

முன்னதாக பல கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் கிருமி நாசினியால் கைகளை கழுவிய பிறகே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story