புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,677 பேருக்கு கொரோனா பரிசோதனை


புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,677 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 26 May 2020 10:47 PM GMT (Updated: 26 May 2020 10:47 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பினை கண்டறிய புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நாள்தோறும் சுமார் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிங்களில் இருந்து வருபவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை சுமார் 6,677 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரியில் 4 ஆயிரத்து 965பேருக்கும், காரைக்காலில் 873 பேருக்கும், மாகி, ஏனாமில் 839 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 34 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 32 பேர் புதுச்சேரியிலும், 2 பேர் மாகியிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story