கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு - இன்று தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு - இன்று தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு
x
தினத்தந்தி 28 May 2020 12:15 AM GMT (Updated: 27 May 2020 9:15 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று தமிழக எல்லையை வந்தடைய வாய்ப்பு உள்ளது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடவேண்டும். கடந்த ஆண்டு கண்டலேறு அணை முழுவதுமாக வற்றிவிட்டதால் ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை.

ஆகஸ்டு மாத இறுதியில் ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கு போதிய தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 25ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு 28ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. அதன்பிறகு ஆந்திராவில் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு பணி காரணமாக தண்ணீர் திறப்பு ஏப்ரல் 15ந் தேதி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 28 முதல் ஏப்ரல் 15 வரை பூண்டி ஏரிக்கு 7.556 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர மாநில அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த 25ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் இன்று (வியாழக்கிழமை) தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து பூண்டி ஏரியை சென்றடையும்.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி.யாகும். நேற்று காலை நிலவரப்படி 26 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 430 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரிக்கு சென்றடைய கிருஷ்ணா நதி கால்வாயில் ஆங்காங்கே அடர்த்தியாக வளர்ந்துள்ள செடிகளை தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர்.

Next Story