இன்று அனைத்து சேவைகளும் கிடைக்கும்: கர்நாடகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


இன்று அனைத்து சேவைகளும் கிடைக்கும்: கர்நாடகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2020 11:15 PM GMT (Updated: 30 May 2020 7:36 PM GMT)

கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மக்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்கும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி நாடு தழுவிய அளவில் பிரதமர் ஊரடங்கை அறிவித்தார். அப்போது தொடங்கிய ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டு இன்னும் அமலில் உள்ளது. இந்த நிலையில் 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பஸ், ஆட்டோ, வாடகை கார் உள்பட அனைத்து வகையான போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 19-ந் தேதி இந்த 4-வது கட்ட ஊரடங்கை கர்நாடக அரசு அறிவித்தது. அப்போது, வருகிற 31-ந் தேதி (இன்று) வரை ஞாயிற்றுக்கிழமை நாளில் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது, 24-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இந்த முழு ஊரடங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த ஞாயிறு முழு ஊரடங்கை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஞாயிறு முழுஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள், ஞாயிறு முழு ஊரடங்கு வேண்டாம் என்று வலியுறுத்தினர். அதனால் நாளை (அதாவது இன்று) ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. இன்று வழக்கம்போல் போக்குவரத்து உள்பட அனைத்து சேவைகளும் கிடைக்கும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில், இன்று ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து சேவைகளும் இருக்கும் என்றும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வழக்கமான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story