தென்மேற்கு பருவமழை 6-ந் தேதி தொடங்க வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்


தென்மேற்கு பருவமழை 6-ந் தேதி தொடங்க வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2020 2:42 AM GMT (Updated: 3 Jun 2020 2:42 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வருகிற 6-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 3 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 1 மி.மீட்டரும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மழைபெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 80, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் நாமக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு நல்லதொரு நிலை காணப்படுகிறது. எனவே வருகிற 6-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மழை காலங்களில் செம்மறி ஆடுகளை துள்ளுமாரி நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும்.

இந்த நோய் எல்லா வயது ஆடுகளையும் தாக்கினாலும் இளம்வயது ஆடுகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. எனவே கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story