நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி


நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Jun 2020 6:04 AM GMT (Updated: 5 Jun 2020 6:04 AM GMT)

நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி(வயது 26). டிரைவர். இவர், சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு மருதாட்டில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பண்ருட்டி ஏ.பி.குப்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன்(22) என்பவர் கணிசப்பாக்கத்தை சேர்ந்த கயல்விழி(18) என்ற இளம்பெண்ணுடன் கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

நெல்லிக்குப்பம் அருகே தோட்டப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது சின்னத்தம்பி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், அறிவழகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். அறிவழகன், கயல்விழி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அறிவழகன், கயல்விழி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அறிவழகன் பரிதாபமாக இறந்தார். கயல்விழிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று சின்னத்தம்பி, அறிவழகன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான அறிவழகன், மின்சார துறையில் தற்காலிகமாக பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story