சீனா மீது பிரதமர் மோடிபொருளாதார தடை விதிக்க வேண்டும் நாகையில், இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு


சீனா மீது பிரதமர் மோடிபொருளாதார தடை விதிக்க வேண்டும் நாகையில், இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 6 Jun 2020 12:36 AM GMT (Updated: 6 Jun 2020 12:36 AM GMT)

சீனா மீது பிரதமர் மோடி பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நாகையில், இந்து மக்கள் கட்சியினர் வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாகப்பட்டினம், 

கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்கிய சீனா மீது பிரதமர் மோடி பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நாகையில், இந்து மக்கள் கட்சியினர் வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.

அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கலெக்டர் வழியாக பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார தடை விதிக்க வேண்டும்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள், பட்டாசுகள், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், சீன உணவு மற்றும் துணிமணிகள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். சீன வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவிடம் இருந்து திபெத்தை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டும்.

திபெத் மக்களின் சுதந்திரம், கலாசாரம், பண்பாடு, திபெத்திய மொழி ஆகியவற்றை அழிக்கும் சீன அரசிடம் இருந்து திபெத்தை பாதுகாக்க வேண்டும். நமது நாட்டிற்கு சொந்தமான மானசரோவர் ஏரி மற்றும் திருக்கயிலாய மலையை சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு சொந்தமாக்க வேண்டும். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்கிய சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story