தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசு முடிவு செய்யும் - மந்திரி பி.சி.பட்டீல் தகவல்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கான சிகிச்சை கட்டணத்தை அரசு முடிவு செய்யும் என்று மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டு பெற்றுள்ளார். கர்நாடகத்தின் பங்கை மத்திய அரசு கொடுத்துள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வயதானாலும், ஒரு நாளைக்கு 10, 15 கூட்டங்களை நடத்துகிறார். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களால் பரவாமல் இருந்திருந்தால், கர்நாடகத்தில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு முடிவு செய்துள்ளது. ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கட்டணத்தை முடிவு செய்யும்.
எழுதி இருப்பார்கள்
தனியார் மருத்துவமனைகளும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்யும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி கேட்டு கடிதம் எழுதி இருப்பார்கள்.
எச்.விஸ்வநாத்திற்கு மேல்-சபையில் போட்டியிட டிக்கெட் கிடைக்காதது குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சா.ரா.மகேஷ் குறை கூறி பேசி இருக்கிறார். இதற்கு எச்.விஸ்வநாத்தே சரியான பதில் கொடுப்பார்.
இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story