கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்


கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 28 Jun 2020 1:26 AM GMT (Updated: 28 Jun 2020 1:26 AM GMT)

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளரும், கொரோனா தடுப்பு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான மணிவாசன், மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

துணிச்சலான முடிவு

கூட்டத்தை தொடர்ந்துஅமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்து, குணம் அடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேசமயம் அச்சப்பட தேவையில்லை. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு இல்லை. தற்போது பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களுக்கு, வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக பரவி உள்ளது.

அவசியம் இல்லை

கொரோனாவை தடுக்க தியாக உணர்வுடன் பணியாற்றும் டாக்டர்கள், போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து விட்டது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் கூடுதலாக திறந்து விட அரசு தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களை ஆலோசித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியமோ, நெருக்கடியோ அரசுக்கு இல்லை. தவறான பிரசாரம் செய்வது மக்களை பீதி அடைய வைக்கக்கூடிய செயலாகும்.

வெற்றிப்பயணம்

2011-ம் ஆண்டில் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஜெயலலிதா கோவையில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ரீதியான பயணத்தை கோவையில் தொடங்கி உள்ளார். இது ஆட்சிக்கு வெற்றி பயணமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story