விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 28 Jun 2020 2:54 AM GMT (Updated: 28 Jun 2020 2:54 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இவரோடு சேர்த்து பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்,

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதுபோல் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 712 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 527 பேரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். அதன் விவரம் வருமாறு:-

திண்டிவனத்தை சேர்ந்தவர்

விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். இவருடைய சொந்த ஊர் திண்டிவனமாகும். தற்போது விழுப்புரத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். காய்ச்சல் குணமடையாமல் தொடர்ந்து இருந்ததால் அவர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருடைய உமிழ்நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்று திண்டிவனத்தில் உள்ள கபர்ஸ்தானுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறந்த அவருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story