திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 Jun 2020 9:30 PM GMT (Updated: 29 Jun 2020 7:06 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் ஒரு முதியவர் இறந்தார். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேநேரத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 7 பேர், கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு பலியாகி உள்ளனர். 8-வதாக நேற்று முதியவரின் உயிரை கொரோனா குடித்தது. திண்டுக்கல் மேற்குரதவீதியை சேர்ந்த அந்த முதியவருக்கு 63 வயது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நுரையீரலில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

Next Story