“தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” ஜெயராஜின் மகள் உருக்கமான பேட்டி


“தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” ஜெயராஜின் மகள் உருக்கமான பேட்டி
x
தினத்தந்தி 2 July 2020 10:30 PM GMT (Updated: 2 July 2020 7:07 PM GMT)

“நீதியை நிலைநாட்டிய அனைவருக்கும் நன்றி. தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று ஜெயராஜின் மகள் பெர்சி கூறினார்.

சாத்தான்குளம், 

“நீதியை நிலைநாட்டிய அனைவருக்கும் நன்றி. தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று ஜெயராஜின் மகள் பெர்சி கூறினார்.

இதுதொடர்பாக சாத்தான்குளத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதியை நிலைநாட்டிய...

என்னுடைய தந்தை ஜெயராஜ், தம்பி பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டுக்கும், நேர்மையாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் சாதி, மத பேதமின்றி தங்களுடைய தந்தையாக, சகோதரனான கருதி, குரல் கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தேசம் கடந்து ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கும், சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், திரைப்படத்துறையினருக்கும், நீதியை நிலைநாட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மீண்டும் நிகழக்கூடாது

நாங்கள் அரசுக்கு எதிராகவோ, போலீசுக்கு எதிராகவோ செயல்படவில்லை. என்னுடைய தந்தை, தம்பியை கொலை செய்த சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராகத்தான் குரல் கொடுத்தோம். என்னுடைய தந்தை-தம்பி சிந்திய ரத்தம் வீணாகவில்லை என்பது ஆறுதலாக உள்ளது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், கைது நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் யாருக்கும் மீண்டும் நிகழக்கூடாது என்ற வேண்டுகோளை அரசுக்கு வைக்கிறோம். எங்களைப் போன்று எந்த குடும்பமும் கலங்கி நிற்கக்கூடாது. எங்க ளுக்கு துணை நின்ற அனைத்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

உச்சபட்ச தண்டனை

கைது நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

Next Story