விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு முழு பலன்கள் வழங்கப்படாத நிலை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


விருப்ப ஓய்வு பெற்ற  பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு முழு பலன்கள் வழங்கப்படாத நிலை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 July 2020 1:42 AM GMT (Updated: 3 July 2020 1:42 AM GMT)

விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாத நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்த படி கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் 76,126 பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். அதன்படி தமிழகத்தில் 8,761 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டது. அப்போது மத்திய அரசு இவர்களுக்கான ஓய்வூதிய பலன்களில் 50 சதவீதம் மார்ச் மாதம் இறுதிக்குள்ளும், மீதமுள்ள 50 சதவீதம் ஜூன் மாதம் இறுதிக்குள்ளும் வழங்கப்பட்டு விடும் என உறுதி அளித்தது.

ஆனால் மத்திய அரசு கடந்த மார்ச் மாத இறுதியில் 31.1 சதவீத ஓய்வூதிய பலன்களையும், கடந்த ஜூன் மாத இறுதியில் 22.5 சதவீத ஓய்வூதிய பலன்களை மட்டுமே வழங்கி உள்ளது. இன்னும் 46.4 சதவீத ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாத நிலையில் உள்ளது. இந்தஓய்வூதிய தொகை எப்போது வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

பாதிப்பு

விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் பெரும்பான்மையினர் விருப்ப ஓய்வு பெற்ற நோக்கமே அதன் மூலம் கிடைக்கும் ஓய்வூதிய தொகையில் இருந்து பெண் குழந்தைகளின் திருமணம், குழந்தைகள் உயர்கல்வி செலவு ஆகியவற்றை சமாளித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான்.

ஆனால் மத்திய அரசு உறுதி அளித்தப்படி முழு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாத நிலையில் விருப்ப ஓய்வு பெற்றபெரும்பான்மையான பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் தங்கள் குடும்ப கடமைகளை நிறைவேற்ற முடியாமல் பாதிப்பு அடைந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதிய பலன்

எனவே மத்திய தொலைத்தொடர்புத்துறை விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர்களுக்கு மத்திய அரசு உறுதிஅளித்தப்படி முழு ஓய்வூதியபலன்களையும் கடந்த ஜூன் மாதத்திற்குள் வழங்காத நிலையில் மீதமுள்ள 46.4 சதவீத ஓய்வூதிய பலன்களை மேலும் தாமதம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து விருப்ப ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story