போத்தனூரில் பயங்கரம் : கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை - கட்டிட தொழிலாளி கைது


போத்தனூரில் பயங்கரம் : கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை - கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 1 Aug 2020 11:15 PM GMT (Updated: 2 Aug 2020 3:09 AM GMT)

கோவை போத்தனூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர்,

நெல்லை மாவட்டம் திசையன்விளை குட்டம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிலிங்கம் (வயது 21). இவர் அங்குள்ள அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். அவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி கோவைக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வந்தார். அவர், சிட்கோ பகுதியில் அறை எடுத்து தங்கி குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இசக்கிலிங்கம் இறந்து விட்டதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் அவரின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்விவரம் வருமாறு:-

இசக்கிலிங்கத்திற்கும், சிட்கோ பிள்ளையார்புரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அபுபக்கர் சித்திக் (36) என்பவரது மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதை இசக்கிலிங்கத்தின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதை கேட்க வில்லை.

இதுகுறித்து தெரியவந்ததும் அபுபக்கர் சித்திக், தனது மனைவி மற்றும் இசக்கிலிங்கத்தை கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அபுபக்கர் சித்திக் கடந்த 30-ந் தேதி இசக்கிலிங்கத்தின் அறைக்கு சென்று அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் 2 பேருக்கும் மாறிமாறி தாக்கி கொண்டனர்.

அப்போது அபுபக்கர் சித்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இசக்கிலிங்கத்தின் முகம், மார்பு, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதனால் வலிதாங்க முடியாமல் துடித்த இசக்கிலிங்கம், அவரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனாலும் அவரை விடாமல், அபுபக்கர் சித்திக் அங்கு கிடந்த பூரிக்கட்டையால் முகம் மற்றும் தலையில் பலமுறை ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அபுபக்கர் சித்திக் அங்கிருந்து தப்பி ஓடியது தெரிய வந்தது.

இதையடுத்து, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்ததை மாற்றி கொலை வழக்காக போலீசார் மாற்றினர். இந்த கொலை தொடர்பாக அபுபக்கர் சித்திக்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story