கொரோனா பீதியால் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பு இரட்டை குழந்தைகள் பெற்ற 10 நாட்களில் இளம்பெண் சாவு மூச்சு திணறலால் உயிரிழந்த பரிதாபம்


கொரோனா பீதியால் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பு இரட்டை குழந்தைகள் பெற்ற 10 நாட்களில் இளம்பெண் சாவு மூச்சு திணறலால் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 2 Aug 2020 10:00 PM GMT (Updated: 2 Aug 2020 8:36 PM GMT)

பெங்களூருவில், கொரோனா பீதியால் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்ததால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்தார். அந்த இளம்பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இரட்டை குழந்தைகள் பெற்று இருந்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் வசித்து வந்தவர் பானந்தி(வயது 22). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பானந்திக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பானந்தி, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிரசவத்தின் போது பானந்திக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதனால் பானந்தியும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பிரசவத்திற்கு முன்பு அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு பானந்தியும், அவருடைய குழந்தைகளும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பானந்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக பானந்தி, ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் படுக்கை வசதி மற்றும் வென்டிலேட்டர் இல்லை என்று கூறி பானந்திக்கு சிகிச்சை அளிக்க அந்த தனியார் மருத்துவமனை மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக பானந்தி அழைத்து செல்லப்பட்டார். ஆனால் கொரோனா பீதியால் அவருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்து விட்டன.

இறுதியாக பானந்தி, விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பானந்தி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்ததால் அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பானந்தியின் உடலை சுகாதாரத்துறையினர் பெற்று சென்று அடக்கம் செய்தனர். இதற்கிடையே சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் தான் பானந்தி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இரட்டை குழந்தை பெற்ற 10 நாட்களில் மூச்சுத்திணறலால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணா. இவர், நேற்று காலையில் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் சொந்த வாகனத்தில் பாலகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் அவரிடம் கொரோனா பரிசோதனை அறிக்கை இல்லாததால், கொரோனா பீதியால் பாலகிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளிக்க 4 தனியார் மருத்துவமனைகள் மறுத்து விட்டன. இதையடுத்து அவர் இறுதியாக ராமய்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பாலகிருஷ்ணா இறந்து விட்டார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் தான் பாலகிருஷ்ணா இறந்து விட்டதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story