கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து நாளை முடிவு - மந்திரி உதய் சாமந்த் தகவல்


கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து நாளை முடிவு - மந்திரி உதய் சாமந்த் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2020 12:35 AM GMT (Updated: 30 Aug 2020 12:35 AM GMT)

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்துவது என்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என மாநில உயர்கல்வி மந்திரி உதய் சாமந்த் கூறினார்.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக பல மாநிலங்கள் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடிவு செய்து இருந்தன. மராட்டிய அரசும் கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தேர்வுகள் நடத்தாமல் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது என உத்தரவிட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாநில உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி துறை மந்திரி உதய் சாமந்த் கூறியதாவது:-

பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்துவது என்பது குறித்து திங்கட்கிழமை (நாளை) முதல்கட்ட முடிவு எடுக்கப்படும். அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும். மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் முடிவுகள் எடுக்கப்படும். அதிகபட்ச முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வுகளை நடத்த முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

மும்பை பல்கலைகழக துணை வேந்தர் சுகாஸ் பெட்னேகர் தலைமையிலான 6 பேர் அடங்கிய குழு தேர்வுகள் நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மாநில அரசு மதிக்கிறது. தேர்வு கால அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story