இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார்: வேறொரு பெண்ணை திருமணம் செய்த டிரைவர் கைது


இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார்: வேறொரு பெண்ணை திருமணம் செய்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2020 1:16 AM GMT (Updated: 30 Aug 2020 1:16 AM GMT)

ஊத்துக்கோட்டை அருகே இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக வந்த புகாரையடுத்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் நாவல்குப்பம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் வினோத் (வயது 26). கார் டிரைவர். இவருடைய 17 வயது தங்கை தாமரைகுப்பத்தை சேர்ந்த ஞானமூர்த்தி என்பரின் மகள் சர்மிளா (19) உடன் சேர்ந்து படித்துள்ளார்.

அப்போது வினோத், சர்மிளாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து, கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் அனுமதி கேட்டனர். அவர்கள் நிராகரித்து விட்டதால், வினோத் கடந்த மாதம் 12-ந் தேதி சேலை கிராமத்தை சேர்ந்த சபினா (20) என்பரை உறவினர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்து ஆத்திரமடைந்த சர்மிளா, வினோத்திடம் நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்தைகள் கூறி ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெயவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதையடுத்து, நேற்று வினோத்தை கைது செய்தார்.

Next Story