மூலனூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி கைது


மூலனூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி கைது
x
தினத்தந்தி 1 Sep 2020 6:30 AM GMT (Updated: 1 Sep 2020 6:20 AM GMT)

மூலனூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூலனூர், 

மூலனூரை அடுத்த சானார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் 24 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டனர். இதனால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதை அறிந்த பழனிசாமி, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை பழனிசாமி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையில் வேலைக்கு சென்ற பெற்றோர் மாலையில் வீடு திரும்பியபோது, தனது மகளின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூலனூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை காவலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story