தஞ்சை, திருவாரூரில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - டெல்டாவில், ஒரே நாளில் 316 பேருக்கு தொற்று உறுதி


தஞ்சை, திருவாரூரில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - டெல்டாவில், ஒரே நாளில் 316 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 Sep 2020 10:30 PM GMT (Updated: 1 Sep 2020 10:58 PM GMT)

தஞ்சை, திருவாரூரில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். டெல்டாவில், ஒரே நாளில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 737 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 126 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 858 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3,587 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆண், 77 வயது ஆண் ஆகிய 2 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,686 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 100 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,942 ஆக அதிகரித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட மருத்துவமனைகளில் 699 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2689 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 85 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,774 ஆக உயர்ந்தது.

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 42 பேர் பலியான நிலையில், 1852 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை, திருவாரூரில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். டெல்டாவில், ஒரே நாளில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Next Story