திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sep 2020 4:10 AM GMT (Updated: 15 Sep 2020 4:10 AM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லாமல் இருக்க நுழைவு வாயில் அருகில் மனுக்கள் செலுத்த பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் திங்கட்கிழமை தோறும் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரை நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

நேற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் முதல்- அமைச்சரின் வருகையின் போது அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் நிற்க வைக்கப்பட்டனர்.

முண்டியடிப்பு

அதில் மனு அளிக்க வந்தவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்ற எந்தவித அச்சமும் இல்லாமல் கொஞ்சம் கூட சமூக இடைவெளியின்றி அங்கு திரண்டு இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசாரும், வருவாய் துறையினரும் அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வலியுறுத்தியும் பொதுமக்கள் அதனை கேட்காததால் அலுவலர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மதியம் 1 மணியளவில் காரில் அலுவலகத்திற்கு வந்தார். பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஒவ்வொருவராக வரிசையில் அனுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த இந்த கூட்டத்தினால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதாகவும்,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூலியை உயர்த்த வேண்டும்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்தில் அனைத்து பணியாளர்களும் தினமும் அரசு அறிவித்த அனைத்து பணிகளையும் செய்து வருகின்றோம். அதே நேரத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கள் வாழ்வையும் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தற்போது உள்ள தினக் கூலியை அரசு உயர்த்தி தந்தால் எங்கள் வாழ்வை பாதுகாத்து கொள்ள முடியும். தற்போது உள்ள கூலியில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.420 வீதம் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story