விக்கிரமங்கலம் அருகே மின்மாற்றியை சரி செய்து மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்


விக்கிரமங்கலம் அருகே மின்மாற்றியை சரி செய்து மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 16 Sep 2020 12:29 AM GMT (Updated: 16 Sep 2020 12:29 AM GMT)

விக்கிரமங்கலம் அருகே மின்மாற்றியை சரி செய்து மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கீழநத்தம் மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றி பழுதானதால் வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீடுகளிலுள்ள மின் விளக்குகள், மிக்சி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சரியாக இயக்க முடியவில்லை.

மேலும் குறைவான மின் அழுத்தத்தால் மின் மோட்டார்கள் இயங்காததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற முடியாததால் வீடுகளுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கீழநத்தம் பொதுமக்கள் நேற்று மதியம் பஸ் நிலையம் அருகே உள்ள அரியலூர்- முத்துவாஞ்சேரி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, தேளூர் துணைமின் நிலைய அதிகாரி ராஜா, கீழநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் மாலா பாக்யராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு சரியான அளவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story