குண்டடம் அருகே, 101 வயது அண்ணன் இறந்த அதிர்ச்சியில் 98 வயது தங்கையும் சாவு - பாசமலரை மிஞ்சிய பாசம்


குண்டடம் அருகே, 101 வயது அண்ணன் இறந்த அதிர்ச்சியில் 98 வயது தங்கையும் சாவு - பாசமலரை மிஞ்சிய பாசம்
x
தினத்தந்தி 16 Sep 2020 4:30 PM GMT (Updated: 16 Sep 2020 4:32 PM GMT)

குண்டடம் அருகே 101 வயது அண்ணன் இறந்த அதிர்ச்சியில் 98 வயது தங்கையும் இறந்த சம்பவம் பாசமலர் படத்தை மிஞ்சிவிட்டது.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த தும்பலப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 101). பேரன், பேத்திகள் எடுத்து விட்ட காளியப்பன் தனது மகனின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவருடைய தங்கை நல்லாத்தாள் (98). இவருக்கும் அதே ஊரில் திருமணமாகி பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்தார். அண்ணன்-தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் அதிக பாசம் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் காளியப்பன் மற்றும் நல்லாத்தாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது நல்லாத்தாள், என் அண்ணனும் நானும் ஒரே நாளில் இறந்து விடுவோம். அப்போது எங்களது உடலை அருகருகே புதைத்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

அதன்பின்னர் குணமடைந்து வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மீண்டும் காளியப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நல்லாத்தாளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு காளியப்பன் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. அவருடைய உடலை அங்குள்ள இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். காளியப்பன் இறந்துபோன தகவல் படுத்த படுக்கையாக இருந்த அவருடைய தங்கை நல்லாத்தாளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நல்லாத்தாள் அதிர்ச்சியில் நேற்று மதியம் 12 மணிக்கு இறந்தார். இதையடுத்து நல்லாத்தாள் விரும்பியபடியே அவரது அண்ணன் காளியப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே நல்லாத்தாளின் உடலும் புதைக்கப்பட்டது.

பணமே பிரதானம் என்றாகி விட்ட இன்றைய நவீன உலகில் பாசம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எள்ளளவு இடம் கூட விட்டு தரமாட்டேன் என்று, ரத்த உறவுகளே கோர்ட்டுக்கு அலையும் காலமல்லவா இது. பாசமலர் சினிமாவில் அண்ணன்-தங்கையின் பாசம் அனைவரின் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்து விடும். அதையும் மிஞ்சிய அளவுக்கு அண்ணன்-தங்கை பாசம் இன்றும் உள்ளது என்பதை ஒரு அண்ணன்-தங்கை தங்களது சாவில் நிரூபித்து விட்டனர்.

Next Story