சிறார்களிடம் பாலியல் குற்றம் குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்


சிறார்களிடம் பாலியல் குற்றம் குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:45 PM GMT (Updated: 16 Sep 2020 5:58 PM GMT)

சிறார்களிடம் பாலியல் செயல்பாடு குற்றம் என்பது குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களிடம் பாலியல் செயல்பாடு குற்றம் என்பது குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஸ்டிக்கரை வெளியிட்டார். இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ரேஷன் கடைகளில் ஒட்டுவதற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் அல்லது சிறுமியிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றம் ஆகும். இதற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். இந்த குற்றச் செயல்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஸ்டிக்கர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், டீக்கடைகள், சலூன் கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட உள்ளது. சிறார்களிடம் பாலியல் செயல்பாடு தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் போலீஸ் துறைக்கோ அல்லது 1098 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கரை போலீஸ் நிலையங்களில் ஒட்டும் பணி தொடக்க நிகழ்ச்சியில் தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், தென்பாகம் போலீஸ் நிலையங்களில் ஸ்டிக்கரை ஒட்டி பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான குற்றங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. அந்த சட்டங்கள் குறித்து கிராமப்புற மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது பற்றி உடனே புகார் மற்றும் தகவல் தெரிவிக்க 1098 என்ற தொலைபேசி எண்ணை அல்லது போலீஸ் அவசர உதவி எண் 100 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரம் சொல்ல தேவையில்லை. அவ்வாறு தெரிவித்தாலும், அவர்களை பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நமது நோக்கமாகும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ஜோதிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story