கொல்லிமலை நீர் மின் திட்டம்: புளியஞ்சோலையில் சப்-கலெக்டர் ஆய்வு


கொல்லிமலை நீர் மின் திட்டம்: புளியஞ்சோலையில் சப்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sep 2020 1:49 AM GMT (Updated: 20 Sep 2020 1:49 AM GMT)

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை, கொல்லிமலை பகுதியில் முசிறி சப்-கலெக்டர் ஜோதிசர்மா ஆய்வு மேற்கொண்டார்.

உப்பிலியபுரம்,

நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது கொல்லிமலை. இங்குள்ள காட்டாறு மூலம் பெறப்படும் நீர் இரு மாவட்ட பகுதிகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,300 அடி உயரத்தில், 280 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் கொல்லிமலை, மழைக்காலங்களில் அசாதாரணமான நீர்பிடிப்பு பகுதியாக அமைந்துள்ளது.

குறிப்பாக கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவி பெருக்கெடுத்து, கீழ்நோக்கி பாய்ந்து புளியஞ்சோலை பகுதியில் அய்யாறாக உருவெடுக்கிறது. இந்த ஆறு மூலம் உப்பிலியபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயத்துக்கு நீராதாரமாக உள்ளது.

நீர் மின் திட்டம்

மழைக்காலங்களில் புளியஞ்சோலைக்கு வரும் நீர் வீணாவதை தடுத்து, 20 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் கொல்லிமலை நீர் மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக சுமார் 5 எக்டேர் நிலப்பரப்பில் வனப்பகுதியில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முசிறி சப்-கலெக்டர் ஜோதிசர்மா புளியஞ்சோலை பகுதியில் நீர் மின் திட்டம் செயல்பட உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துறையூர் தாசில்தார் அகிலா, துணை தாசில்தார் கோவிந்தராசு, எரகுடி வருவாய் ஆய்வாளர் பாரதி, பச்சபெருமாள்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதுபோல் சித்தாம்பூர் ஊராட்சியில் காவிரி கொடுந்துறை பாசன வாய்க்கால் வழியாக வரும் உபரி நீர் மழை காலங்களில் அய்யாற்றில் வீணாக செல்கிறது. அய்யாற்றில் வீணாகும் உபரி நீரை கிபோக்கி பாலம் அமைத்து சிக்கத்தம்பூர் ஏரிக்கு கொண்டு செல்வது குறித்து முசிறி சப்-கலெக்டர் ஜோதி சர்மா, தாசில்தார் சந்திரதேவநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரீனா, கண்காணிப்பாளர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story