டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி - ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி - ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2020 12:45 PM GMT (Updated: 20 Sep 2020 12:42 PM GMT)

டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவி குழு கடன் மற்றும் கல்வி கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் முகவராகச் செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு நிபந்தனையின்படி குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

இந்தக் கடன் தொகையை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் பெண்களுக்கு 4 சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் மூலம் 90 சதவீதம் கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 5 சதவீதம் கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத் தொகை 5 சதவீதமும் சேர்த்து கடன் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story