விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - கல்வராயன்மலையில் தொழிலாளி சாவு


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - கல்வராயன்மலையில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 20 Sep 2020 2:00 PM GMT (Updated: 20 Sep 2020 1:55 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 2 பேர் பலியாகியுள்ளனர். கல்வராயன்மலையில் தொழிலாளி இறந்தார்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,122 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 89 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 9,103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 930 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டியை சேர்ந்த 68 வயது மூதாட்டியும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேல்மலையனூரை சேர்ந்த 52 வயதுடைய நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் விக்கிரவாண்டி போலீஸ்காரர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர் உள்பட மேலும் 144 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,266 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 124 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,041 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 8 ஆயிரத்து 506 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்வராயன்மலையில் உள்ள விளாநெல்லி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய தொழிலாளி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று 980 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 92 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.

Next Story