வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு


வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
x
தினத்தந்தி 21 Sep 2020 2:58 AM GMT (Updated: 21 Sep 2020 2:58 AM GMT)

மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 22). இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் ஆகாஷ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறைக்குள் ஆகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மனஉளைச்சல்

இதுகுறித்து ராயலா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கில் தொங்கிய ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.அதில், ஆகாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதற்காக தனியார் நிறுவனங்களிடம் மனநல ஆலோசனை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மன உளைச்சல் காரணமாகவே ஆகாஷ் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தாத்தாவும் சாவு

இதற்கிடையில் ஆகாஷ் இறந்த செய்தியைக் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னை வந்த அவரது தாத்தா ஜெயராமன் (74) என்பவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அதற்குள் அவரும் இறந்துவிட்டார்.

பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story