சூளகிரி அருகே, விவசாயி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சூளகிரி அருகே, விவசாயி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Sep 2020 10:45 PM GMT (Updated: 22 Sep 2020 8:43 PM GMT)

சூளகிரி அருகே விவசாயியை அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சகாதேவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 48), விவசாயி. இவருக்கு எல்லம்மா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நாராயணப்பா சுரக்காலபள்ளி என்ற இடத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் இரவு நேரத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர் தோட்டத்திற்கு சென்றார். பின்னர், அங்கு 3 பேருடன் சேர்ந்து அவர் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி, உணவு கொடுத்து விட்டு சென்றார். நாராயணப்பா உணவை பெற்றுக்கொண்டு மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

பின்னர், நள்ளிரவில் மனைவி எல்லம்மா தோட்டத்திற்கு சென்றார். அப்போது, நாராயணப்பா அடித்துக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து சூளகிரி போலீசார் அங்கு சென்று நாராயணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாராயணப்பா, மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் விவசாயியை அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story