காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 23 Sep 2020 10:30 PM GMT (Updated: 23 Sep 2020 7:24 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடக-தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக் கல்லை வந்தடைந்தது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து சென்றது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை முதல் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒகேனக்கல் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் யாரும் குளிக்க கூடாது என்றும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story