நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது கற்பழிப்பு வழக்கு


நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது கற்பழிப்பு வழக்கு
x
தினத்தந்தி 23 Sep 2020 11:15 PM GMT (Updated: 23 Sep 2020 11:15 PM GMT)

நடிகை பாயல் கோஷ் அளித்த பாலியல் புகாரின் பேரில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தநிலையில் இந்தி பட நடிகை பாயல் கோஷ் இவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

“அனுராக் காஷ்யப் வீட்டுக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், மேலும் அவர் 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து இருப்பதாக பெருமையாக கூறியதாகவும் ” பாயல் கோஷ் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இயக்குனர் அனுராக் காஷ்யப் திட்டவட்டமாக மறுத்ததுடன், இது ஆதாரமற்ற புகார் என தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத், நடிகை பாயல் கோஷிற்கு ஆதரவளித்ததுடன், அனுராக் காஷ்யப்பை கைது செய்யவேண்டும் என தெரிவித்தார். இதற்கிடையே நடிகை பாயல் கோஷ், தனது வழக்கறிஞருடன் மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று காஷ்யப் மீது புகார் அளித்தார். இதில் 2013-ம் ஆண்டில் வெர்சோவாவின் யாரி சாலையில் உள்ள ஒரு இடத்தில் காஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் அனுராக் காஷ்யப் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376 (1)(கற்பழிப்பு) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதின் சாத்புடே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி உள்ளார்.

Next Story