சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்


சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2020 12:03 AM GMT (Updated: 24 Sep 2020 12:03 AM GMT)

சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு, 

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் நிலையில் 93 காலி பணியிடங்களுக்கும், சமையலர் நிலையில் 11 காலிப்பணியிடங்களுக்கும் மற்றும் சமையல் உதவியாளர் நிலையில் 97 காலி பணியிடங்களுக்கும் என மொத்தம் 201 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

எனவே பெண்கள் மட்டும் இன்று முதல் (வியாழக்கிழமை) வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அமைப்பாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பழங்குடியினர் (எஸ்.டி) 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) 21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும், மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சமையலர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண் ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும். (ஊராட்சி, குக்கிராமம், வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது). வயது வரம்பு 31.8.2020-ம் தேதியினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

மேலும் இதற்குரிய விண்ணப்பபடிவங்கள் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். இந்த காலக்கெடுவிற்கு பிறகு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படவோ, பெறப்படவோ மாட்டாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏதும் வழங்கப்படவும் பெறப்படவும் மாட்டாது.

மேலும் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களை தொடர்பு கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பின் தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும்.

அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முக தேர்விற்கு மனுதாரர் பள்ளிக்கல்வி இறுதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், இருப்பிடச்சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தூரச்சான்று ஆகிய அசல் சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளவேண்டும். ஆதரவற்ற விதவை, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான அசல் சான்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story