எம்.எல்.ஏ. விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


எம்.எல்.ஏ. விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Sep 2020 9:13 PM GMT (Updated: 29 Sep 2020 9:13 PM GMT)

எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பை சர்ச்கேட் அருகே ஆகாஷ்வாணி என்ற பெயரில் எம்.எல்.ஏ. விடுதி உள்ளது. இந்த விடுதியின் தொலைபேசியில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.

இதில் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க இருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். உடனே இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சோதனை

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விடுதியில் இருந்தவர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் மோப்பநாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. தீவிரமாக நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இது பற்றி மெரின்லைன் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story