பெண்கள் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது; கள்ளக்காதலனை அடைய தீர்த்துக்கட்டியது அம்பலம்


பெண்கள் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது; கள்ளக்காதலனை அடைய தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 3 Oct 2020 1:03 AM GMT (Updated: 3 Oct 2020 1:03 AM GMT)

கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலனை அடைய கைதான பெண் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

பெலகாவி,

பெலகாவி அருகே மச்சே கிராமத்தை சேர்ந்தவர் கங்கப்பா. இவரது மனைவி ரோகினி (வயது 23). ரோகினிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தான் திருமணம் நடந்தது. தற்போது ரோகினி கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் ரோகினி, தனது உறவினரான ராஜஸ்ரீ பன்னூர் (21) என்பவருடன் கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி கிராம எல்லையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் ரோகினி, ராஜஸ்ரீ பன்னூர் ஆகியோரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

பின்னர் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஈவு இரக்கமின்றி கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெலகாவி உதவி போலீஸ் கமிஷனர் விக்ரம் டர்டே தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது கைதானவர்கள் பெலகாவி அருகே கலேநட்டி கிராமத்தை சேர்ந்த கல்பனா பசரிமாரா (35), மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் நாயக், பெலுகுந்தியை சேர்ந்த ராகுல் பட்டீல், கணேஷ்பூரை சேர்ந்த ரோகித் வாடர், கலேநட்டியை சேர்ந்த ஷானூர் பன்னா ஆகியோர் ஆவார்கள். இவர்களில் கைதான கல்பனாவுக்கும், கொலையான ரோகினியின் கணவர் கங்கப்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கங்கப்பாவுக்கு கடந்த ஆண்டு தான் ரோகினியுடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் திருமணத்திற்கு பிறகு கங்கப்பா, கல்பனாவுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இருப்பினும் கள்ளத்தொடர்பை கைவிட முடியாத கல்பனா, கங்கப்பாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ரோகினியால் தான் கங்கப்பா தன்னை புறக்கணிப்பதாக நினைத்த கல்பனா, ரோகினியை தீர்த்துகட்டிவிட்டால் கங்கப்பா, தனக்கு தான் என திட்டம் தீட்டியுள்ளார். இதுகுறித்து தனது உறவினரான மகேஷ் நாயக் உள்பட 4 பேரிடமும் கல்பனா கூறியுள்ளார்.

அதன்படி 5 பேரும் சேர்ந்து நடைபயிற்சி சென்ற ரோகினியை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதை பார்த்த ராஜஸ்ரீ பன்னூர் போலீசில் கூறிவிடுவார் என்பதால் 5 பேரும் சேர்ந்து அவரையும் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. கள்ளக்காதலனை அடைய அவரது கர்ப்பிணி மனைவி உள்பட 2 பெண்களையும் கல்பனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றுள்ளார்.

கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேற்கண்ட தகவலை உதவி போலீஸ் கமிஷனர் விக்ரம் டர்டே நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story