தூத்துக்குடி அருகே பரபரப்பு: கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ - கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசம்


தூத்துக்குடி அருகே பரபரப்பு: கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ - கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 Oct 2020 3:04 AM GMT (Updated: 3 Oct 2020 3:04 AM GMT)

தூத்துக்குடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் 60 வீடு காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 50). இவருக்கு சொந்தமான விசைப்படகு தருவைகுளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் இந்த படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக, படகில் வைத்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது கியாஸ் சிலிண்டர் டியூப்பில் திடீரென ஓட்டை விழுந்து படகில் தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென்று படகு முழுவதும் வேகமாக பரவியது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அலறியடித்தவாறு கடற்கரைக்கு திரும்பி ஓடி வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் படகில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் படகு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போது கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த விசைப்படகுகளுக்கு ஐஸ் கட்டிகளை வழங்குவதற்காக, ஒரு லாரியில் ஐஸ் கட்டிகள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரியில் இருந்து ஐஸ் கட்டிகளை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இதற்கிடையே, விசைப்படகில் வெடித்து சிதறிய சிலிண்டரின் பாகம், கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் டீசல் டேங்கிலும் விழுந்தது. இதனால் அந்த லாரியின் டீசல் டேங்கும் வெடித்து சிதறியது. தொடர்ந்து லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அருகில் இருந்த மீனவர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரம் போராடி லாரியில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீப்பிடித்த படகின் அருகே பல படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில், எரிந்து கொண்டு இருந்த விசைப்படகை மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து சென்று, சற்று தொலைவில் கடல் பகுதியில் விட்டனர். இதனால் மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு, வலைகள், லாரி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தருவைகுளம் கடற்கரையில் விசைப்படகு, லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story