கரூர் அருகே, வீட்டில் இருந்து மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு


கரூர் அருகே, வீட்டில் இருந்து மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 Oct 2020 4:45 AM GMT (Updated: 8 Oct 2020 4:41 AM GMT)

கரூர் அருகே வீட்டில் இருந்து மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்.

கரூர், 

கரூர் வாங்கல் அருகே உள்ள கல்லுபாளையத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 15). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவன், கரூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மணிகண்டனை காணவில்லை என அவருடைய பெற்றோர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.

இந்தநிலையல், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் பிணம் ஒன்று மிதப்பதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு இறந்து கிடப்பது வீட்டில் இருந்து மாயமான சிறுவன் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் அருகே வீட்டில் இருந்து மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story