திருவாரூரில் நகராட்சி பூங்காவில் புகுந்த 8 அடி நீளமுள்ள பாம்பு - தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்


திருவாரூரில் நகராட்சி பூங்காவில் புகுந்த 8 அடி நீளமுள்ள பாம்பு - தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
x
தினத்தந்தி 18 Oct 2020 10:15 AM GMT (Updated: 18 Oct 2020 10:14 AM GMT)

திருவாரூரில் நகராட்சி பூங்காவில் புகுந்த 8 அடி நீளமுள்ள பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் பனகல் சாலையில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மனுநீதி சோழன் மணி மண்டபமும் அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று 8 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பூங்காவிற்குள் புகுந்தது. தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துக்குமார் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நீண்டநேரத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் லாவகமாக பிடித்து பாம்பை சாக்குபையில் அடைத்தனர். 8 அடி நீளம் கொண்ட இந்த பாம்பு, மஞ்சள் சாரை இனத்தை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பூங்காவில் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story