வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் ஹெலிகாப்டரில் பறந்து சென்று எடியூரப்பா நேரில் ஆய்வு


வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் ஹெலிகாப்டரில் பறந்து சென்று எடியூரப்பா நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2020 10:21 PM GMT (Updated: 21 Oct 2020 10:21 PM GMT)

வட கர்நாடகத்தில் மழை- வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹெலிகாப்டரில் பறந்தபடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நிவாரண பணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

உதவி செய்யவில்லை

இதனால் அங்கு ஓடும் கிருஷ்ணா, பீமா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரைக்கு வெளியே வெள்ளம் வெளியே அருகில் உள்ள கிராமங்களில் நீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கியதால், அங்குள்ள மக்கள் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தின் மூலம் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 43 ஆயிரம் பேரை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். 38 ஆயிரம் பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மந்திரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹெலிகாப்டரில் பறந்தபடி...

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக அவர் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பல்லாரிக்கு தனி விமானத்தில் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கலபுரகிக்கு சென்று, வெள்ள சேதங்களை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து கலபுரகி மற்றும் யாதகிரி மாவட்ட அதிகாரிகளுடன் எடியூரப்பா கலபுரகியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான், மாநில பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன், கலபுரகி கலெக்டர் வி.வி.ஜோத்சனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடிநீர் விநியோகம்

கலபுரகி மாவட்டத்தில் ஹெலிகாப்டரில் பறந்து மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டேன். அதன் பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். அதில் கலபுரகி, யாதகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் என்னிடம் விவரங்களை கூறினர். இதுகுறித்த அனைத்து தகவல்களையும் நான் கேட்டு பெற்றுள்ளேன். கலபுரகியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்யும்படியும், மின் கம்பங்கள் சரிந்து பாதிக்கப்பட்டுள்ள மின் வினியோகத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் கிராமங்களிலும் குடிநீர் வினியோகம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன். இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கும்படியும் கூறியுள்ளேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

43 ஆயிரம் பேர்

மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. முழுமையாக இடிந்து விழுந்துள்ள வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். கிருஷ்ணா, பீமா ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கலபுரகி உள்பட 4 மாவட்டங்களில் 247 கிராமங்களில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளன. 117 கிராமங்கள் பாதி அளவு நீரில் மூழ்கியுள்ளன. அந்த கிராமங்களில் இருந்து 43 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ராணுவ வீரர்கள், தேசிய இயற்கை பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் இணைந்து வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 5,000 பேரை மீட்டு காப்பாற்றியுள்ளனர். அந்த கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா ஆகிய 4 மாவட்டங்களில் 233 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 38 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து சேத விவரங்களை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் என்னிடம் பேசி உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயாப்புரா

பயணம் ரத்து

நேற்று மாலை எடியூரப்பா விஜயாப்புரா மாவட்டத்தில் வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த மாவட்டத்தில் மோசமான வானிலை நிலவியது. இதனால் விஜயாப்புரா மாவட்டத்தில் எடியூரப்பா வெள்ள சேதங்களை பார்வையிடுவது ரத்து ஆனது. பின்னர் அவர் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார்.

Next Story