குடிமராமத்து பணிகளை நீர்வள ஆதார இயக்குனர் ஆய்வு


குடிமராமத்து பணிகளை நீர்வள ஆதார இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2020 1:38 PM GMT (Updated: 22 Oct 2020 1:38 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சத்தியகோபால் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிகாலில் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஏரிக்கரை ஓரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சத்தியகோபால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருவண்ணாமலை தாலுகா வெறையூர் பெரிய ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணியையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜீதாபேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் ரூ.96 லட்சத்திலும், செங்கம் ஒன்றியத்தில் செங்கம் ஏரியில் ரூ.98 லட்சம் மதிப்பிலும், கரியமங்கலம் பெரிய ஏரியில் ரூ.97 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். தாசில்தார் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் குளம் பகுதியில் தேக்கு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அத்திமலைப்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்கத்தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கான தானியங்கி மோட்டார் சுவிட்ச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக 210 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தானியங்கி மோட்டார் சுவிட்ச் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டு மின் பயன்பாடும் குறைக்கப்படும் என தெரிவித்தார். ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மாதங்கி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story