சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்


சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்
x
தினத்தந்தி 24 Oct 2020 12:01 AM GMT (Updated: 24 Oct 2020 12:01 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அதிகரித்து தற்போது 172 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் தொடக்கத்தில் பயணிகள் எண்ணிக்கை சுமாா் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரை குறைவாகவே இருந்தது. அப்போது உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதியில், பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனை பகுதியில் ஒரு கவுண்ட்டா் மட்டுமே செயல்பட்டது.

தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாளுக்கு பயணிகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் பயணிகள் பாதுகாப்பு சோதனை பிரிவில் தற்போது 3 கவுண்ட்டா்கள் செயல்படுகிறது. சில நேரங்களில் அதிக பயணிகள் வரும்போது நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆனால் தற்போது பாதுகாப்பு சோதனை பிரிவில் பயணி முதலில் தான் அணிந்திருக்கும் மாஸ்கை கீழே இறக்கி தனது முகத்தை தானியங்கி கேமராவில் காட்டி பதிவு செய்யவேண்டும். போா்டிங் பாஸ், புகைப்பட அடையாள அட்டையை கேமராவில் காட்டவேண்டும். பாதுகாப்பு அதிகாரி கவச கூண்டில் இருந்து சரிபாா்த்து அனுமதி வழங்குவார்.

அதன்பின்பு செல்போன், கைப்பை ஸ்கேன் செய்யும் இடத்தில், பயணி கனமான ஷு அணிந்திருந்தால் அதையும் கழற்றி ஸ்கேன் செய்து பரிசோதிக்கின்றனா். இதனால் ஒரு பயணிக்கு 3-ல் இருந்து 4 நிமிடங்கள் வரையாகிறது.

மேலும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும். இதற்காக விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் இ-பாஸ் கவுண்ட்டர் உள்ளது. கொல்கத்தா, வாரணாசி போன்ற நகரங்களில் இருந்து வேலைக்காக சென்னை வரும் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று இ-பாஸ் பெற வேண்டியதாக உள்ளது.

அப்போது சமூக இடைவெளியை மறந்து ஒருவரோடு ஒருவா் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கின்றனா். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், நீண்ட வரிசையை தவிா்க்கவும் கூடுதலாக கவுண்ட்டா்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்களுடைய செல்போனில் இ-பாஸ் எளிதாக பெற்று வந்தால் நீண்டவரிசையில் நிற்பதை தவிர்க்கலாம். ஆனால் கட்டுமானம், தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளிகளாக இருப்பதால் உரிய தகவல்களை பெற்று இ-பாஸ் வழங்கப்படுவதால் நீண்ட வரிசையில் நிற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story