பெங்களூருவில் திருமண நாளன்று புதுப்பெண் தற்கொலை கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் புகார்


பெங்களூருவில் திருமண நாளன்று புதுப்பெண் தற்கொலை கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 25 Oct 2020 12:56 AM GMT (Updated: 25 Oct 2020 12:56 AM GMT)

பெங்களூருவில் திருமண நாளன்று புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர், அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு எசருகட்டா குலலட்சுமி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் விகாஷ். இவருக்கும் ரோஜா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு (2019) அக்டோபர் 24-ந் தேதி திருமணம் நடந்தது. நேற்று விகாஷ், ரோஜா தம்பதிக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் ஆகும்.

இந்த நிலையில் நேற்று காலை ரோஜா தனது அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சோழதேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரோஜா அறையில் கடிதம் எதுவும் எழுதி வைத்து உள்ளாரா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் கடிதம் எதுவும் சிக்கவில்லை.

கணவர் மீது புகார்

இதனால் ரோஜாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விகாசும், அவரது குடும்பத்தினரும் ரோஜாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ரோஜாவின் தாய் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விகாஷ், அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நாளன்று புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலலட்சுமி லே-அவுட் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story