இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
x
தினத்தந்தி 1 Nov 2020 12:45 AM GMT (Updated: 1 Nov 2020 12:45 AM GMT)

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.

பெரியபாளையம்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வீரக்குட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அனுசுயா (வயது 21). இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குமரபேட்டை ஊராட்சி ராள்ளபாடி கிராமத்தை சேர்ந்த கட்டுமான வேலை செய்து வரும் முனுசாமி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அனுசுயா-முனுசாமி தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், முனுசாமி பஜார் வீதிக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த முனுசாமி, அனுசுயா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து முனுசாமி தனது மாமனார் ராஜேந்திரன், மாமியார் ஜெயலட்சுமி ஆகியோருக்கு அனுசுயா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தார்.

அவர்கள் விரைந்து வந்த மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ஜெயலட்சுமி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அனுசுயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story