குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை வயரால் இறுக்கி கொலை கணவர் தலைமறைவு


குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை வயரால் இறுக்கி கொலை கணவர் தலைமறைவு
x
தினத்தந்தி 20 Nov 2020 8:00 AM GMT (Updated: 20 Nov 2020 2:21 AM GMT)

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை வயரால் இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் நூரூதீன் (வயது 52). பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அசினாபேகம் (42). இவர்களுக்கு அல்டாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகளுக்கு திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நூரூதீன், தனது மனைவி, மகனுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் அல்டாப் வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் தனது தாயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு தனது தாய் அசினா பேகம் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அசினாபேகத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், அசினாபேகம் உடலை மீட்டு விசாரித்தனர். அதில் அவரது கழுத்து இறுக்கப்பட்டும், முகத்தில் கையால் குத்தப்பட்ட காயங்களின் தழும்புகளும் இருந்தது. அவரது கணவர் நூரூதீனும் வீட்டில் இல்லை.

பின்னர் நடத்திய விசாரணையில் நூரூதீன், தனது மனைவி அசினா பேகத்தின் கழுத்தை வயரால் இறுக்கி கொலை செய்துவிட்டு, செல்போனை வீட்டில் வைத்துவிட்டு தப்பிச்சென்றது தெரிந்தது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே இந்த குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு நூரூதீன் தலைமறைவாகி உள்ளாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

தலைமறைவாக உள்ள நூரூதீன் பிடிபட்டால்தான் கொலைக் கான உண்மையான காரணங்கள் தெரியவரும். தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அசினா பேகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வழக்கு மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நூரூதீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story