திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2-வது நாளாக தூய்மைப்பணி; 100 டன் குப்பைகள் அகற்றம் கலெக்டர் சிவராசு ஆய்வு


திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2-வது நாளாக தூய்மைப்பணி; 100 டன் குப்பைகள் அகற்றம் கலெக்டர் சிவராசு ஆய்வு
x
தினத்தந்தி 29 Nov 2020 1:45 AM GMT (Updated: 29 Nov 2020 1:45 AM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2-வது நாளாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

திருச்சி,

மதுரை ஐகோர்ட்டு தடை நீங்கியதையடுத்து, கொரோனாவால் மூடப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் 8 மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்தும், சன்சைடு உள்ளிட்ட கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னரே வியாபாரம் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நேற்று முதல் காந்தி மார்க்கெட்டில் மீண்டும் வியாபாரம் தொடங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி நேற்று வியாபாரம் தொடங்க முடியவில்லை.

2-வது நாளாகஆக்கிரமிப்பு அகற்றம்

நேற்று முன்தினம் முதல் காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள கடைகளின் முன்புள்ள கூரை ஷெட், சன்சைடு, சிமெண்டு சிலாப்பு ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் இரவு, பகலாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் நரசிங்கமூர்த்தி, உதவி பொறியாளர் லோகநாதன் முன்னிலையில் ஷிப்டுக்கு 100 துப்புரவு பணியாளர்கள் வீதம் தொடர்ந்து இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதாவது காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு ஷிப்டு என்றும், பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை மற்றொரு ஷிப்டு என தூய்மை பணி நடந்தது.

வடிகால் மாயம்

காந்தி மார்க்கெட்டின் உள்ளே கடைகள் முன்பு வியாபாரிகள் மழைநீர் வடிந்து செல்லக்கூடிய வடிகால்களை ஆக்கிரமித்து அதன் மேலே பெஞ்ச் உள்ளிட்டவைகளை வைத்து ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனால், மார்க்கெட்டில் பல இடங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால் மாயமாகி இருந்தது.

அவற்றை நேற்று மாநகராட்சி பணியாளர்கள் தோண்டி அடுத்து வடிகாலில் நிரம்பி இருந்த சாக்கடை கழிவை அகற்றினர். சில இடங்களில், கட்டிட பணியாளர்களை கொண்டு புதிதாக வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டன.

100 டன் குப்பைகள் அகற்றம்

காந்தி மார்க்கெட்டில் 2 நாட்களில் ஆக்கிரமிப்புகள், சாக்கடை கழிவுகள் என 100 டன் குப்பைகள் லாரி லாரியாக அகற்றி கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘காந்தி மார்க்கெட்டில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள், குப்பைகள் அகற்றப்பட்டன. அந்த வகையில் 40 லாரிகளில் 100 டன் குப்பைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது‘ என்றார்.

கலெக்டர் திடீர் ஆய்வு

இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘காந்தி மார்க்கெட்டில் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றி, தூய்மைப்பணி மேற்கொண்ட பின்னர் மீண்டும் வியாபாரம் தொடங்கும். மேலும் நீதிமன்ற கமிட்டியும் பார்வையிட்டு முடிவெடுக்க உள்ளது. காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது‘ என்றார்.

எப்போது வியாபாரம்?

எனவே, காந்தி மார்க்கெட் மீண்டும் காய்கறி விற்பனையை தொடங்குவது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அல்லது நாளை (திங்கட்கிழமை) முதல் இருக்கலாம் என்றும், இது தொடர்பாக வியாபாரிகள் கூட்டம் நடத்தி முடிவெடுக்க உள்ளதாக கூறப்பட்டது.

வியாபாரிகள் ஆலோசனை

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் மார்க்கெட் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். இதில் காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் காந்திமார்க்கெட்டை திறந்து இரவு முதல் வியாபாரம் நடத்துவது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் காந்திமார்க்கெட்டுக்கு அனைத்து கனரக வாகனங்களும் வந்து சென்று விட வேண்டும். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை காந்திமார்க்கெட்டில் மொத்த வியாபாரத்தை முடித்து விட வேண்டும். அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணிக்குள் சில்லரை வியாபாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மதியத்திற்குப் பிறகு, தூய்மை பணி நடைபெற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்க்கெட் வளாகத்தில் ஒலிபெருக்கி அமைத்து, மக்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story