மாமனாரை கம்பியால் குத்திக்கொலை செய்த மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


மாமனாரை கம்பியால் குத்திக்கொலை செய்த மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 1 Dec 2020 4:40 AM GMT (Updated: 1 Dec 2020 4:40 AM GMT)

சிங்காரபேட்டை அருகே மாமனாரை கம்பியால் குத்திக்கொலை செய்த மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ளது வெங்கடாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மாயாண்டி என்கிற சுப்பிரமணி (வயது 57). இவருடைய மகள் அலமேலு. இவருக்கும், தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா பொறிச்சிகல் என்கிற வெங்கடராமபுரத்தை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் மகாதேவன் (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் மகாதேவன் சந்தேகப்பட்டார். இதனால் கணவருடன் வாழ முடியாது எனக் கூறி பெற்றோர் வீட்டிற்கு அலமேலு வந்தார். மேலும் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு அலமேலு வழக்கும் தொடர்ந்தார்.

மாமனார் குத்திக்கொலை

இதனால் மகாதேவனுக்கும், அவருடைய மனைவி மற்றும் மாமனார் இடையே தகராறு அதிகமானது. கோர்ட்டிற்கு வரும் போது மனைவி மற்றும் மாமனாரை மகாதேவன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 13.8.2015 அன்று வீட்டில் தனியாக இருந்த மாயாண்டி, இரும்பு கம்பியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து மாயாண்டியின் மனைவி சின்னபாப்பா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கொலை செய்ததாக மகாதேவனையும், கொலைக்கு உறுதுணையாக இருந்ததாக வெங்கடாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மாயன் என்கிற மாரியப்பனையும் (28) கைது செய்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மகாதேவன், மாயன் என்கிற மாரியப்பன் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கும், சதி திட்டம் தீட்டிய குற்றத்திற்காகவும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.

Next Story