கோவில்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 33 பேர் கைது - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு


கோவில்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 33 பேர் கைது - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு
x
தினத்தந்தி 1 Dec 2020 10:00 PM GMT (Updated: 1 Dec 2020 7:00 PM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் நேற்று கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும் நேற்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்துவதற்காக கலால் வரி அலுவலகத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

இந்த ஊர்வலத்திற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின்பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

உடனே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், விஜயலட்சுமி, ஆறுமுகம், ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி தெய்வேந்திரன், விளாத்திகுளம் கயத்தாறு சாலமன் ராஜ், கிருஷ்ணவேணி, ராமசுப்பு உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story