லாடபுரம் மயிலூற்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


லாடபுரம் மயிலூற்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 11 Jan 2021 12:15 AM GMT (Updated: 11 Jan 2021 12:15 AM GMT)

லாடபுரம் மயிலூற்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் மயிலூற்று அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மயிலூற்று அருவியில் வட கிழக்கு பருவமழையினால் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் இந்த மயிலூற்று அருவிக்கு பெரம்பலூர் மாவட்டம் மட்டுமில்லாமல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

அவர்கள் அருவியில் குளிப்பது மட்டுமின்றி, பச்சமலை தொடரின் அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது பச்சைமலையில் பெய்து வரும் தொடர் மழையினால் மயிலூற்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் உற்சாக குளியல் போட்டு செல்கின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா தலமாக்க கோரிக்கை

ஆனால் மயிலூற்று அருவிக்கு செல்லும் சாலை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அருவிக்கு செல்லும் மலைப்பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் அருவிக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மயிலூற்று அருவியை சுற்றுலா தலமாக்கப்படும் என்று சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது. அது இதுநாள் வரை வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், மயிலூற்று அருவியில் குளிப்பதற்கான தலம் அமைக்க வேண்டும். ஆண், பெண்களுக்கு தனித்தனியாக உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள் கட்ட வேண்டும். சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு கட்டிடம் கட்ட வேண்டும். கேன்டீன் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அருவிக்கு செல்லும் பழுதடைந்த சாலையை அகற்றி தார்சாலை அமைக்கவும், மலைப்பாதையில் படிக்கட்டுகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மயிலூற்று அருவியை சுற்றுலாத்தலமாக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story