ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே


முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான ஆஸ்பத்திரியை பார்வையிட்ட போது எடுத்தபடம்
x
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான ஆஸ்பத்திரியை பார்வையிட்ட போது எடுத்தபடம்
தினத்தந்தி 11 Jan 2021 12:25 AM GMT (Updated: 11 Jan 2021 12:25 AM GMT)

தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை சந்தித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறினார்.

குடும்பத்தினருடன் சந்திப்பு
பண்டாரா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விமானம் மூலம் மும்பையில் இருந்து பண்டாரா சென்றார். அவர் ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் ஆஸ்பத்திரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் பேசினார்.

கடும் நடவடிக்கை

பின்னர் முதல்-மந்திரி கூறியதாவது:-
குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. தீ பிடித்தது விபத்தாக நடந்ததா அல்லது தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காத காரணங்களால் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தின் போது மாநிலத்தில் வேறு எதுவும் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை கண்டறியவும் உத்தரவிட்டு உள்ளேன். உண்மை விரைவில் தெரியவரும். எதாவது விதிமீறில் நடந்து இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story